மக்களைத் தவறாக வழிநடத்தும் சுகாஸ்; சுமந்திரன் சாடல்

சர்வதேச விசாரணை ஒன்று முடிவடைந்ததா? என்பது சம்பந்தமாக நான் ஒரு கேள்வி கேட்டேன். அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை என்பதால் பொய்யான அவதூறுகள் கொட்ட வேண்டிய தேவையில்லை, அது ஒரு சட்டத்தரணிக்கு அழகுமல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
‘மக்களை நான் தவறாக வழி நடத்துவதாக நீங்கள் (சுமந்திரன்) குறிப்பிட்டிருப்பதை பார்த்தபோது சாத்தான் வேதம் ஓதிய கதை நினைவுக்கு வந்தது.மக்களைத் தவறாக வழிநடத்துவது நானா?நீங்களா?’ என சுமந்திரனிடம் சுகாஷ் கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,அதற்கு பதில் வழங்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
1) தேசியப் பட்டியல் ‘பின் கதவு’ என்றால் உங்கள் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் 2020 ஆம் ஆண்டு பின் கதவாலா பாராளுமன்றத்திற்குள் நுளைந்தார்? நான் எங்கேயும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தவறானது என்று கூறியதில்லை. அதற்கு மாறான எனது கருத்து பல இடங்களில் பதிவாகி உள்ளது. இதை மறுப்பதற்கு பத்திரிகை எடுத்து வர வேண்டாம். பத்திரிகைகள் வேண்டுமென்றே தவறான செய்திகளை வெளியிட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு.
2) இனப்படுகொலைக்கு ஆதாரங்கள் இல்லை என்று நான் எங்கேயும் கூறியதில்லை. இனப்படுகொலையை குற்றவியல் ரீதியாக நிறுவுவதற்கு இன்னொரு கூறு (ingredient) தேவை என்றே கூறியிருக்கிறேன். Mens Rea இற்கும் Dolus Specialis இற்கும் உள்ள வித்தியாசம் சட்டத்தரணி என்று சொல்லிக்கொள்கிறவர்களுக்கும் தெரியாமல் இருப்பது துரதிஷ்டமே.
3) மேலே (2) இல் சொன்னது இதற்கும் பொருந்தும்
4) ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சி அல்ல, ஏக்கிய ரஜய தான் ஒற்றையாட்சி என்ற வித்தியாசம் கூட ஒரு சட்டத்தரணிக்குத் தெரியாதா?
நீங்கள் கூறிய மற்றைய விடயங்கள் வெறும் அவதூறுகளே. அவற்றிற்குப் பதில் வழங்கத் தேவையில்லை. கலப்புப் பொறிமுறையை உள்ளக விசாரணை என்று கூறும் உங்களது கருத்தைக் குறித்து யாரை நொந்து கொள்வது? எமது நாட்டின் கல்விக் கட்டமைப்பையா? . மீண்டும் சொல்கின்றோம் ‘பேப்பர் கட்டிங்’அரசியல் செய்து மக்களைத் தவறாக வழிநடத்துவது தவறு என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
![]()