இலங்கை

நாட்டின் ஜனாதிபதி அநுரவா? ரில்வினா?

“அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளை ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவே வெளியிடுகின்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் முடிவுக்கு மாறான விடயங்களை அவர் அறிவிக்கின்றார். அதுவே அரசின் முடிவாக வெளிவருகின்றது. அப்படியானால் நாட்டின் ஜனாதிபதி ரில்வின் சில்வாவா?” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில்  ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இலங்கை அரசு செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை அங்கீகரிப்பதற்கான பிரேரணையின் மீது உரையாற்றுகையிலேயே அவர் இப்படிக் கேள்வி எழுப்பினார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆற்றிய உரைக்கு ஆட்சேபம் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், செயலாளரும் ஒப்பமிட்டு அனுப்பி வைத்த கடிதத்தின் பிரதியை அவர் தமது உரையில் முழுமையாக வாசித்தார். அதன் பின்னர் அவர் தமது உரையைத் தொடர்ந்தார்.

“அரசாங்கம் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்ய முன்னர் தனது நாட்டின் மக்களுடன் இணக்கம் காண வேண்டும். இந்த அரசு பதவிக்கு வந்து ஒரு வருடமாகின்றது. ஆனால், தன்னுடைய நாட்டின் பிரஜைகளான தமிழர்களுடன் ஓர் ஒப்பந்தத்துக்கு, இணக்கத்துக்கு, அது இன்னமும் வரவில்லை.

மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் அரசு தரப்பு ஒன்றுக்கொன்று முரணான தகவல்களை வெளியிடுகின்றது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான தனிநபர் பிரேரணையை நான் சமர்ப்பித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. அது தொடர்பின் அரசின் பதிலைக் கேட்டுக் களைத்து விட்டேன். பதில் கூறுவதில்லை என்று அரசு இழுத்தடிக்கின்றது.

மாகாண சபைத் தேர்தல்கள் இந்த ஆண்டு முடிவதற்கு முன்னர் நடைபெறும் என்று ஜனாதிபதி கூறினார். முன்னைய விலக்கப்பட்ட பழைய தேர்தல் சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார் என சுமந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இந்தத் தேர்தல் நடைபெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்திருந்தார். ஆனால், அரசாங்கத்தில் இடம்பெறாத ரில்வின் சில்வாவோ எல்லை நிர்ணயப் பணி முடிந்த பின்னர்தான் மாகாண சபைத் தேர்தல்கள் என்று யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்தார்.

இப்போது ஜெனிவாவில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அதையே கூறுகின்றார். அப்படியானால் நாட்டில் தீர்மானத்தை எடுக்கும் ஜனாதிபதி பதவியில் இருப்பவர் ரில்வின் சில்வாவா?” – என்று சாணக்கியன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“16 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் மாறி, மாறி வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கான நீதியை மறுத்தமை போலவே இந்தத் தேசிய மக்கள் சக்தி அரசும் நீதியை மறுப்பதற்கான ஆரம்ப வேலையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் அமர்வில் வெளிவிவகார அமைச்சரின் உரையின் ஊடாகச் சொல்லி இருக்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த நாட்டுக்குள் வெளிநாடுகள் அல்லது சர்வதேச நாடுகள் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனக் கூறியுள்ளார். இந்த நாட்டினுடைய அரசு, அமைச்சர்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை, தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரிக்கின்றார்கள்.

பாதிக்கப்பட்ட சமூகமான தமிழ் மக்கள் ஓர் சர்வதேச விசாரணை வேண்டும், சர்வதேச தலையீடு வேண்டும், சர்வதேச மேற்பார்வை வேண்டும் என்றும், சர்வதேசத்தின் உதவியுடன்தான் உண்மைகள் கண்டறியப்படலாம், சர்வதேசத்தின் ஊடாகத்தான் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் மாறி, மாறி வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கான நீதியை மறுத்தமை போலவே இந்தத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் நீதியை மறுக்கின்றமைக்கான ஆரம்ப வேலைகளை இந்த அமைச்சரின் உரையின் ஊடாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

நாட்டின் ஜனாதிபதி வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்து மைதானங்களைத் திறந்து வைக்கலாம் அல்லது ஆரம்பித்து வைக்கலாம். அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கலாம். இதேபோன்றுதான் கடந்த காலத்தில் ராஜபக்‌ஷக்கள், மைத்திரி, ரணில் போன்ற அனைத்துத் தலைவர்களும் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்தார்கள்.

ஆனால், அந்த மக்களுடைய எதிர்பார்ப்பு, தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே நடந்த அநீதிக்கு, இனப் படுகொலைக்கு நீதி வேண்டும், விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், அத்தோடு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு வேண்டும் என்பதுதான். மேற்படி விடயங்களை இந்த அரசாங்கம் மறுத்தால் தமிழ் மக்களின் எதிர்ப்பை இன்னும் அதிகமாகச் சம்பாதிக்கும்.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *