நேபாளத்தில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் போராட்டக்காரர்களினால் பாராளுமன்றம் முற்றுகை; இதுவரை 14 பேர் பலி ;100 க்கும் மேற்பட்டோர் காயம்

காத்மாண்டு: சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததை எதிர்த்து அந்நாட்டின் ஜென் Z தலைமுறையினர்நீறு ஆரம்பித்த போராட்டத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்த நிலையில் பொலிஸாரின் தடைகளை உடைத்தெறிந்தவாறு போராட்டக்காரர்கள் பாராளுமன்றத் கட்டிடத்தொகுதியில் நுழைய முயன்று வருவதுடன் கட்டிடத்தொகுதியிலும் ஏறியுள்ளனர்
பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் Z தலைமுறையினர் என்று வரையறுக்கப்படுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகமெடுத்த காலத்தில் பிறந்த இவர்கள் சமூக வலைதள ஆப்களை உணர்வுபூர்வமாகவும் அணுகுபவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில், நேபாளத்தில் இந்த ஜென் Z தலைமுறையினர், நேற்று திங்கட்கிழமை மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். ஒரே நேரத்தில், தலைநகர் காத்மாண்டு மற்றும் முக்கியப் பகுதிகளான பொக்காரா, புட்வால், தாரன், கோரஹி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் பொலிஸாரை திக்குமுக்காட வைத்தனர்.
நிலைமை கட்டுக்கடங்காமல் செல்ல போலீஸ் தடியடி தொடங்கி துப்பாக்கிச் சூடு வரை நடத்தியுள்ளனர். இதில், இதுவரை 14 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நேபாளபாராளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் படையெடுக்க, அங்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. பாராளுமன்ற வளாகம் அமைந்துள்ள பானேஸ்வர், அதிபர் மாளிகையான ஷித்தால் நிவாஸ், துணை அதிபர் குடியிருப்பான லைன்சார், பிரதமர் இல்லம் அமைந்துள்ள பலுவாட்டார், அரசு வளாகங்கள் மிகுந்த ஷிங்கா தர்பார் ஆகிய பகுதிகளில் நேற்று பகல் 1 மணி முதல் இரவு 10 மணி வரை ஊரடங்கை அமுல்படுத்தியது காத்மாண்டு மாவட்ட நிர்வாகம்.
பாராளுமன்றத்துக்கு செல்லவிடாமல் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டும் கூட இளைஞர்கள் பொலிஸ் தடுப்பு வேலிகளை தகர்த்துவிட்டு முன்னேறிச் சென்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஏறியுள்ளனர் அவர்கள் ஆளும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிரதமர் ஒலி பதவி விலக வேண்டும், அவர் நேபாளத்தை விட்டே வெளியேற வேண்டும் என்பது அவர்களின் பிரதான முழக்கமாக உள்ளது.
![]()