இலங்கை

கைது அச்சத்தில் அலறும் உதய கம்மன்பில; எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க திட்டம்

அரசியல் பழிவாங்கலுக்காகவே அரசு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முயற்சிக்கிறது. இதற்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உட்பட உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச ஆகியோரை சந்தித்து மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.

இதன்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2025.08.05 ஆம் திகதியன்று ஊடக சந்திப்பை நடத்தி விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சோடிக்கப்பட்ட சாட்சியை அடிப்படையாகக் கொண்டு கடற்படையின் முன்னாள் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டார் என்று உதய கம்மன்பில குறிப்பிட்டிருந்தார்.

இந்த கூற்றில் எந்தவொரு இனத்தையும் அவர் குறிப்பிடவில்லை. அரசியலமைப்பின் 14(1) அளிக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்துக்கு அமைவாகவே அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

ஊடக சந்திப்பை நடத்தி உதய கம்மன்பில குறிப்பிட்ட கருத்தினால் இனங்களுக்கிடையில் முரண்பாடு ஏற்படும் என்று குறிப்பிட்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 120 ஆவது பிரிவின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்கம் கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு பி அறிக்கை சமப்பித்துள்ளது.

உரிய காரணிகள் ஏதுமின்றி சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டால் பிணை பெற்றுக்கொள்வது கடினமானதாக அமையும்.

ஆகவே அரசாங்கத்தின் அடக்குறைகளுக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என பிவிதுறு ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *