இம்முறை மனித உரிமைகள் அமர்வில் PTA குறித்து கூடுதல் கவனம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 16 வது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கையில், இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) குறித்த கவலைகள் மற்றும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம் இச்சட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்த போதிலும், இதன் கீழ் தனிநபர்களை கைது செய்து நீண்ட காலம் தடுத்து வைப்பது தொடர்கிறது என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தி, அதை ரத்து செய்யவோ அல்லது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க புதிய வரைவுச் சட்டத்தை அறிமுகப்படுத்தவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் ஸ்தானிகர் பரிந்துரைத்துள்ளார்.
மேலும், இச்சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களையும் விடுவிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் கருத்துச் சுதந்திரம், அமைதியான ஒன்றுகூடல், மற்றும் பேச்சு சுதந்திரத்தை தேவையற்ற முறையில் கட்டுப்படுத்தும் சட்டங்களை ரத்து செய்யவோ அல்லது திருத்தவோ உயர் ஸ்தானிகர் பரிந்துரைத்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 16வது அமர்வு 2025 செப்டம்பர் 8 முதல் ஒக்டோபர் 3 வரை நடைபெறவுள்ளது. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இவ்வமர்வில் பங்கேற்கவுள்ளார்.
![]()