இலங்கை

சிறப்பு அறிக்கையுடன் ஜெனிவா செல்லும் இலங்கை குழு

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கையின் சிறப்பு இராஜதந்திர குழு எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை ஜெனிவாவுக்கு விஜயம் செய்கிறது. தொடர்ந்தும் மூன்று நாட்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் கலந்துக்கொள்ள உள்ள இலங்கைக் குழு, உள்ளக விசாரணைகளுக்கான சர்வதேசத்தின் வழிகாட்டல்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை கோருவதற்கு திட்டமிட்டுள்ளதுடன், பொறுப்புக்கூறலை முழுமையடைய செய்ய கால அவகாசத்தை அணுகவும் தீர்மானித்துள்ளது. அதேபோன்று கடந்த ஒரு வருடகால முன்னேற்றத்தை எடுத்துரைக்கும் வகையில் முழுமையான அறிக்கையையும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் ச மர்பிக்க உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது மீளாய்வுக் கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகிறது. கடந்தகால மனித உரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அரசாங்கம் மேலும் கால அவகாசத்தை கோரவுள்ளது.

இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில், அடுத்த வருடம் வடக்கு மற்றும் கிழக்கில் மாகாண சபை தேர்தல்களை நடத்தி, அங்கு சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நிலைப்பாட்டை இலங்கை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக்கான கேந்திரியக் குழு (Core Group on Sri Lanka) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டம்பர் அமர்வில் ஒரு புதிய தீர்மானத்தை முன்வைக்கவுள்ளது. இந்த புதிய தீர்மானம், ஏற்கனவே உள்ள தீர்மானங்களை விட, மென்மையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை இந்த தீர்மானம் அங்கீகரிக்கும். இருப்பினும், கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை புதிய தீர்மானம் தொடர்ந்து வலியுறுத்தும் என அரச தரப்பு தகவல்கள் கூறுகின்றன. 51/1 தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் (Sri Lanka Accountability Project) என்ற பொறிமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கமாக இருக்கும்.

மேலும் இந்த புதிய தீர்மானத்தை நேரடியாக பேச்சுவார்த்தை மூலம் எதிர்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத், பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து, பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கத்தின் முழுமையான ஈடுபாட்டை உறுதிப்படுத்தவுள்ளார்.

செப்டம்பர் 8ஆம் திகதி அமர்வு தொடங்கும் போது, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அவர் இலங்கைக்கு மேற்கொண்ட சமீபத்திய விஜயத்தின் அடிப்படையிலான இந்த அறிக்கை, புதிய பரிந்துரைகளை உள்ளடக்கியிருக்கும். அதன் பின்னர், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிப்பார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *