இலங்கை

ரணில் விடுதலைக்கு இராஜதந்திர ரீதியில் அழுத்தம் வரவில்லை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது விடயத்தை தொடர்ந்து அவரது விடுதலைக்காக இராஜதந்திர ரீதியிலான எவ்வித அழுத்தங்களும் அரசாங்கத்திற்கு கொடுக்கப்படவில்லை என்று பதில் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது செய்யப்பட்டிருந்த வேளையில், இராஜதந்திர ரீதியிலான அழுத்தங்கள் ஏதும் முன்வைக்கப்பட்டனவா? என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்தவொரு இராஜதந்திரியோ, எந்தவொரு இராஜதந்திர அமைப்புகளோ அவ்வாறு கருத்து வெளியிடவில்லை. இரண்டு நபர்கள் ஒவ்வொன்றை கூறியுள்ளனர். இதனை அவ்வளவு கணக்கில் எடுக்கத் தேவையில்லை. அவர்களின் ஒருவர் இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவரே. இதனால் அதனை கணக்கிலெடுக்கத் தேவையில்லை.

குறிப்பாக தூதரகமோ, உயர்ஸ்தானிகர் அலுவலகமோ, தூதுவரோ அல்லது உயர்ஸ்தானிகரோ இவ்வாறான கருத்தை தெரிவிக்கவில்லை. நாட்டில் இப்போது சட்டம் அனைவருக்கும் சமமாக செயற்படுத்தப்படுகின்றது என்று உலக நாடுகள் கருதுகின்றன.

இதேவேளை இந்த கைதானது அரசியல் பழிவாங்கல் அல்ல. பொதுச் சொத்தை முறைகேடாக பயன்படுத்துவது என்பது நாட்டின் அடிப்படை சட்டத்தை மீறும் செயற்பாடாகும். இதனால் இந்த விடயத்தை எப்படி அரசியல் பழிவாங்கல் என்று கூறுவது. பொதுச் சொத்தை எவராவது முறைகேடாக பயன்படுத்தியிருந்தால் அது சட்ட விரோத செயற்பாடு என்பது தெளிவானது. இது தொடர்பில் குற்றச்சாட்டு உள்ளது. இதன்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் யார் என்று பார்க்கப்படாது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *