ரணிலுக்கு மறைமுகமாக உள ரீதியில் சித்திரவதை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மறைமுகமாக உள ரீதியிலான சித்திரவதை (Mental torture) அளிக்கப்பட்டதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, கடந்த 22ஆம் திகதி குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்காக முன்னிலையாகிய நிலையில், கைது செய்யப்பட்டார்.
இதன்போது, நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட அவரை, நாளை (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
22ஆம் திகதி காலை விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி, இரவு 10 மணியளவிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டு வெலிக்கடை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், அன்றைய தினம், அவர் உணவு மற்றும் நீர் இன்றி அதிக நேரம் இருந்ததாகவும் அதனால் அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிஐடி அழைப்பு மற்றும் விசாரணை என்ற பெயரில் திட்டமிட்டு உள ரீதியிலான சித்திரவதை அளிக்கப்பட்டதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறியுள்ளார்.
மேலும், “முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒரு ஒழுக்கமான அரசியல்வாதி. அவர் எங்கு இருந்தாலும் 12.30 மணியளவில் பகல் உணவுக்காக வீட்டிற்கு சென்று விடுவார்.
வேறு எங்கும், வெளியிடங்களிலும் அவர் உணவு உட்கொள்ள மாட்டார். அவ்வாறு பழக்கப்பட்ட ஒருவருக்கு உணவு, நீர் எதுவும் இல்லை என்றால் அவரின் மனநிலை எவ்வளவு மோசமாக இருந்திருக்கும்?
எனவே, இந்த அரசாங்கம் திட்டமிட்டு அவருக்கு உள ரீதியிலான சித்திரவதை கொடுத்து அவரின் உடல்நிலையை இந்த அளவு மோசமடைய செய்துள்ளார்கள் என்பதை நாங்கள் பகிரங்கமாக கூறுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
![]()