இலங்கை

தராதரம் பாராது சட்ட நடவடிக்கை – ரணில் கைதான பின்னணியில் அரசாங்கம் பதில்

சமகால அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதால் பதவியைப் பொருட்படுத்தாமல் சட்டம் அனைவருக்கும் சமமாக செயல்படுத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

பொலிஸ்மா அதிபரா?, பிரதி பொலிஸ்மா அதிபரா? முன்னாள் ஜனாதிபதியா? என பதவிகளை பார்த்து எவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். எவரேனும் தவறு செய்திருந்தால், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தத் தயங்க போவதில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

அவ்வாறான தவறுகளை இழைத்தவர்களே தற்போது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் நாட்டைக் பொறுப்பேற்ற போது, ​​நாடு பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வங்குரோத்து நிலையை அடைந்திருந்தது. அவ்வாறான சமூக பின்னடைவை எதிர்நோக்கியிருந்த போதே, தேசிய மக்கள் சக்தி நாட்டை பொறுப்பேற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

8 முதல் 10 மாத காலத்திற்குள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்டியுள்ளார்.

ஏற்றுமதி வருவாய் தற்போது அதிகரித்துள்ளது. உள்நாட்டு வருவாய் அதிகரித்துள்ளது. பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட பின்புலத்திலேயே பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *