உலகம்

இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல : கூட்டாளிகள்

சீனாவும், இந்தியாவும் போட்டியாளர்களாக அல்லாமல், கூட்டாளிகளாகப் பார்க்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள வாங் யி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார்.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி தனது உரையில்,

” இந்திய – சீன உறவுகள் ஒத்துழைப்புக்குத் திரும்புவதற்கான நேர்மறை போக்கைக் காட்டுகின்றன. இரு நாடுகளும் ஒன்றையொன்று போட்டியாளர்களாக அல்லாமல், கூட்டாளிகளாகப் பார்க்க வேண்டும். இந்தியா – சீனா இடையே தூதரக உறவு ஏற்பட்டு தற்போது 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நாம் கடந்த காலங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.” என அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளும் சரியான உத்தி ரீதியிலான கருத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு நாடு மற்றொரு நாட்டை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் தங்கள் மதிப்புமிக்க வளங்களை இரு நாடுகளும் முதலீடு செய்ய வேண்டும்.

முக்கிய அண்டை நாடுகளான நாம், பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையுடன் இணைந்து வாழ்வதற்கும், இணைந்து வளர்வதற்கும் ஏற்ப இரு தரப்புக்கும் வெற்றி தரக்கூடிய சரியான வழிகளை ஆராய வேண்டும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அண்டை நாடுகளுடன் குறிப்பாக இந்தியாவுடன், நட்பு, நேர்மை, பரஸ்பர நன்மை, உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய கொள்கைகளை நிலைநிறுத்த சீனா தயாராக உள்ளது.

280 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இரண்டு பெரிய வளரும் நாடுகளான இந்தியாவும் சீனாவும் உலகளாவிய பொறுப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும்,
முக்கிய சக்திகளாக செயல்பட வேண்டும், ஒற்றுமை மூலம் வளரும் நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும், சர்வதேச உறவுகளில் உலக பன்முகமயமாக்கல் மற்றும் ஜனநாயகமாக்கலை ஊக்குவிக்க பங்களிக்க வேண்டும்” என சீன வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *