தனியாக மோத முடியாவிடில் கூட்டணி அமைத்து அரசுடன் மோதிப்பாருங்கள்

அரசாங்கத்துடன் தனியாக மோத முடியாவிட்டால் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து மோதலாம் என்றும். அதற்கு முகம்கொடுக்க அரசாங்கம் தயார் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல் பீரிஸ் தலைமயில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியொன்றை அமைப்பதற்காக 17 அரசியல் கட்சிகளால் அண்மையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
தனியாக அரசாங்கத்துடன் மோத முடியாவிட்டால், கூட்டமாக மோதிப்பார்ப்பதே நல்லது.
ஜீ;.எல்.பீரிஸ் போன்றோரை தலைவராக நியமித்துக்கொண்டு அவர்கள் மோதுவார்களாக இருந்தால் அதனையே அனைவரும் விரும்புவர். இது தொடர்பில் அதிகளவில் அவதானத்தை செலுத்த வேண்டியதில்லை. இன்னும் காலம் இருக்கின்றது. அவர்களுக்கு பல பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியிருக்கும் என்றார்.
![]()