ஜம்மு-காஷ்மீரில் மேக வெடிப்பு: 38 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மேக வெடிப்பு காரணமாக நிலச்சரிவும் திடீர் வெள்ளமும் ஏற்பட்டு, 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகளில் இராணுவம் உள்ளிட்ட படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கிஷ்த்வார் மாவட்டத்தின் சோசித்தி கிராமத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட மேக வெடிப்பு, திடீர் நிலச்சரிவையும் வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்தியது.
இதில், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் இருவர் உட்பட குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலர் காணாமல் போயுள்ளதால், இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தற்போது, இராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மற்றும் உள்ளூர் நிர்வாகம் ஆகியவை மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காவல் கட்டுப்பாட்டு அறையின்படி, இதுவரை 38 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சோசித்தி கிராமம், மச்சைல் மாதா யாத்திரையின் தொடக்கப் புள்ளியாகவும், மாதா சண்டி இமயமலை ஆலயத்திற்கு வாகனம் செல்லக்கூடிய கடைசி கிராமமாகவும் உள்ளது. இந்த பேரிடரைத் தொடர்ந்து, வருடாந்திர யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
![]()