இந்தியா

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்தால் இந்தியா மீது போர் தொடுப்போம் – பாகிஸ்தான் மிரட்டல்

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.

இதில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அதன்பின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி இந்தியா அழித்தது.

இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. இதை இந்தியா ஏற்கவில்லை.

இது தொடர்பாக பாகிஸ்தான் இராணுவ தளபதி அசீம் முனீர் கூறும்போது, சிந்து நதி குறுக்கே இந்தியா அணை கட்டினால் ஏவுகணைகளை வீசி அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார். இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் பூட்டோவும் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

சிந்து மாகாண அரசாங்கத்தின் கலாச்சாரத் துறை விழாவில் பிலாவல் பூட்டோ பங்கேற்று பேசியதாவது:-

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்தால் இந்தியாவுக்கு எதிராக மற்றொரு சுற்று போர் தொடுக்கப்படும். சிந்து நதி நீரை பாகிஸ்தானில் இருந்து திருப்பி விடுவது நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மீதான தாக்குதல் ஆகும்.

இந்தியப் பிரதமர் மோடி சிந்து நதியின் மீது தாக்குதல் நடத்துவதாக அறிவித்தால், அவர் நமது வரலாறு, நமது கலாச்சாரம் மற்றும் நமது நாகரிகத்தைத் தாக்குகிறார் என்று அர்த்தம். எனவே, ஆபரேஷன் சிந்தூர் போன்ற தாக்குதலை நடத்த நீங்கள் நினைத்தால், பாகிஸ்தானின் ஒவ்வொரு மாகாணத்தின் மக்களும் உங்களுடன் சண்டையிடத் தயாராக உள்ளனர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இது நீங்கள் நிச்சயமாக தோற்கும் ஒரு போராக இருக்கும். போர் ஏற்பட்டால் மோடியை எதிர்கொள்ளும் வலிமை பாகிஸ்தான் மக்களுக்கு உள்ளது. மற்றொரு போர் மூலம் பாகிஸ்தான் அதன் ஆறு நதிகளையும் மீட்டெடுக்க நேரிடும். பாகிஸ்தான் ஒருபோதும் தலைவணங்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *