முத்தையன்கட்டு சம்பவம் ; அரசாங்கம் நீதியை நிலைநாட்டுமா? – சாணக்கியன் கேள்வி

பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் தாம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து எவ்வகையிலும் மாறுபட்டவர்கள் அல்ல என்பதைத் தற்போதைய அரசாங்கம் நிரூபித்துவருகிறது.
முத்தையன்கட்டு சம்பவம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டுமா? அல்லது தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கைப் பாதுகாக்குமா? என்பதைப் பார்ப்பதற்கான மற்றுமொரு பரீட்சையாகும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சாணக்கியன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது,
படையினரால் அழைக்கப்பட்டு, தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் முத்தையன்கட்டு ஏரியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் வசிப்பவர்கள் வழங்கிய தகவல்களின்படி, சிதைவுற்ற உலோகப்பொருட்களை எடுத்துச்செல்வதற்காக நான்கு இளைஞர்கள் முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு அவர்கள் தாக்கப்பட்டதாகவும், அங்கிருந்து தப்பிய நால்வரில் ஒருவர் காணாமல்போனதாகவும் அறியமுடிகிறது.
அவ்வாறு காணாமல்போன இளைஞரின் சடலம் பின்னர் முத்தையன்கட்டு ஏரியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதிலும், பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதிலும் தாம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து எவ்வகையிலும் மாறுபட்டவர்கள் அல்ல என்பதைத் தற்போதைய அரசாங்கம் நிரூபித்துவருகிறது.
இச்சம்பவம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டுமா? அல்லது தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கைப் பாதுகாக்குமா? என்பதைப் பார்ப்பதற்கான மற்றுமொரு பரீட்சையாகும் எனத் தெரிவித்துள்ளார்.
![]()