இலங்கை

முள்ளியவளையில் பொலிஸார் அராஜகம்; சப்பாத்துக் கால்களால் சிறுமி மீது தாக்குதல்

முள்ளியவளை பொலிஸாரால் தாய் மற்றும் 10 வயதான மகள் ஆகியோர், அராஜகமாக வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தவபாலன் ஜெயரஞ்சினி என்ற குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகள் சுவிஸ்லாந்தில் குடியுரிமை பெற்று வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு சொந்தமான வீட்டில் குறித்த பெண் தற்காலிகமாக வசித்து வருகின்றார்.

குறித்த பெண் அரசாங்க உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் நிலையில், அவர் இதுவரை அரச விடுதியில் வசித்து வந்துள்ளார்.

தற்போது வேறு வீடு பார்த்துச் செல்லவுள்ள நிலையில் தற்காலிகமாக தனது தாயாரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

குறித்த பெண்ணையும், அவரது மகளையும் 3 நாட்களாக வீட்டினுள் பூட்டி வைத்திருந்த முள்ளியவளை பொலிஸார், கடந்த புதன்கிழமை நள்ளிரவன்று வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

அவரது நகை, பணம் உட்பட உடமைகள் அனைத்தையும் பறித்து வீட்டினுள் வைத்து பூட்டி விட்டு பின் பெண்ணையும், அவரது மகளையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கச் சென்றபோது அப்பெண்ணின் 10 வயதான மகளை தாயிடமிருந்து பிரித்து சப்பாத்துக் கால்களால் உதைத்து அடித்துள்ளனர்.

இதற்கு முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பான பொஸிஸ் அதிகாரி மற்றும் பொலிஸார் துணை நிற்பதாகவும், தான் முறைப்பாடு வழங்கச் சென்ற போது, முன்கூட்டியே விடயத்தை தெரிந்து வைத்திருந்த பொஸிஸ் அதிகாரி, தன் முறைப்பாடை கவனத்தில் எடுக்கவில்லை எனவும், குறித்த சம்பவத்துக்கு சுவிஸ்லாந்தில் வசிக்கும் தனது தாய் மற்றும் சகோதரிகளே காரணம் என பொஸிஸ் அதிகாரி தன்னிடமே தெரிவித்ததாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் தனது குழந்தை சப்பாத்துக் காலால் உதைத்து அடித்தபோது தான் உடனடியாக சிறுவர் உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்த நிலையில் அவர்கள் முறைப்பாடு வழங்க நேரடியாக கொழும்பு வருமாறு கூறியுள்ளனரே தவிர எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கணவனும் அரச அதிகாரியாக கடமையாற்றி வரும் நிலையில், அவர் வேலை நிமித்தம் வெளிமாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் தமக்கு ஏற்பட்ட அராஜகத்துக்கு நீதி வேண்டி தனது மகளுடன் குறித்த பெண் வீதியில் இருந்து போராட்டம் மேற்கொண்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றுக்கும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *