மட்டு.மேயருக்கு சிறையிலிருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம்; சி.ஜ.டி.யினர் மேயரிடம் விசாரணை

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு, மட்டக்களப்பில் புனர் நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்களின் பாவனைக்கு விடுமாறு சிறையில் இருக்கும் பிள்ளையான் அனுப்பிய கடிதம் தொடர்பாக மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் சி.ஜ.டி.யினர் வியாழக்கிழமை (07) விசாரணை மேற்கொண்டனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்பிரல் 6ம் திகதி சந்தேகத்தில் சிஜடி யினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்
இந்த நிலையில் கடந்த 30 ம் திகதி பிள்ளையான், கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டு மாநகர முதல்வருக்கு ‘மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பாக’ எனத் தலைப்பிடப்பட்டு அதில் கையொப்பம் இட்ட கடிதம் ஒன்றை அவரது கட்சி உறுப்பினர் ஒருவர் மாநகரசபை முதல்வரிடம் ஒப்படைத்துள்ளார்.
பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிஜடி யின் கீழ் இருக்கும் போது கடிதம் ஒன்று வெளிவந்ததுடன் அது முகநூலில் பிரசுரிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை சிஜடி யினர் மட்டு. மாநகரசபைக்கு சென்று மாநகரசபை முதல்வரிடம் இந்தக் கடிதம் தொடர்பான விசாரணை ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ளனர்.

![]()