இலங்கை

விமானத்தில் நாமலுடன் அநுர பேசியது என்ன? 

தனது பிள்ளைக்கு தொழில் பெற்றுக்கொடுத்த நன்றிக்கடனை நாமல் ராஜபக்சவை விமானத்தில் சந்தித்து ஜனாதிபதி அநுரகுமார வெளிப்படுத்தியுள்ளார்.நாமலுடன் பேசிய விடயங்களை ஜனாதிபதியால் பகிரங்கப்படுத்த முடியுமா,என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. சமிந்த விஜேசிறி சவால் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மீதான ஒத்திவைப்பு இவ்வாறு சவால் விடுத்த அவர் மேலும் பேசுகையில்,

அரச வருமானத்தை அதிகரித்து விட்டோம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் முன்னேற்றத்தின் தன்மை நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கவில்லை. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் பாதிக்கப்பட்ட நிலைலேயே உள்ளனர் .அரச வருமானத்தை அதிகரித்து விட்டு அதனை வீட்டில் வைக்க முடியாது. வருமானத்தின் உச்ச பலனை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும். இந்த அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி விடுவிப்பதில்லை.

அரசாங்கம் தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சுகாதாரம் மற்றும் உணவு ஆகிய அடிப்படை தேவைகள் மீதான வற் வரியை குறைப்பதாக உறுதியளித்தது .ஆனால் இந்த வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

கடந்தகால ஊழல் மோசடிகள் பற்றி பிரதமரிடம் கேள்வியெழுப்பினேன். அவர் வழங்கிய பதிலில் திருப்தியில்லை. கடந்த கால ஊழல்வாதிகளை பாதுகாக்கும் வகையில் தான் இந்த அரசாங்கம் செயற்படுகிறது. தனது பிள்ளைக்கு தொழில் பெற்றுக்கொடுத்த நன்றிக்கடனை நாமல் ராஜபக்ஷவை விமானத்தில் சந்தித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியுள்ளார்.நாமலுடன் பேசிய விடயங்களை ஜனாதிபதியால் பகிரங்கப்படுத்த முடியுமா?

ராஜபக்சக்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளவில்லை என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் தான் இந்த அரசாங்கம் செயற்படுகிறது. ஜனாதிபதியின் போலியான வாக்குறுதிகள் மற்றும் மெருகூட்டப்பட்ட பேச்சுக்கு மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *