இந்தியா

ஆடு,மாடுகளுக்கு வாக்குரிமை வழங்குமாறு சீமான் மீண்டும் வலியுறுத்தல்

ஆடு, மாடுகளுக்காவது வாக்குரிமை வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமையை முறையாக வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில்,தேனி முந்தல், அடவுப்பாறை பகுதியில் “மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்” ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘பட்டியல் வெளியேற்றமே பைந்தமிழர் விடுதலை’ என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் நடைபெற்றது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்தன.

இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய சீமான்,

மாட்டுப்பொங்கல் என்று கொண்டாடிய பரம்பரை நாங்கள். கூரிய கொம்புகள் இருப்பதை மறந்து மாடுகள் வண்டி இழுத்துக் கொண்டிருக்கின்றன.

மாடுகளுக்கு போராட தெரியவில்லை. மேய்ச்சல் நிலம் என்பது எங்களது உரிமை.

ஜாதி, மதம் கொடிய நோய், அது நம்மை பிரிக்கும். ஆனால் மொழி உணர்வே நம்மை இணைக்கும் என தெரிவித்தார்.

ஆடு, மாடுகள் மேய்ப்பது தொழில்முறைகள் அல்ல, எங்களது வாழ்க்கை முறை, கலாசாரம், பண்பாடு.

மலைகளை பாதுகாக்க வேண்டுமெனில்,அங்கு ஆடு, மாடுகள் மேய வேண்டும்.

நீரின்றி அமையாது உலகு எனில் ஆடு,மாடு இன்றி அமையாது காடு.

இதற்காகத்தான் ஆடு, மாடுகளுக்காகவாவது வாக்குரிமை வழங்க வேண்டும் என கோருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *