இலங்கை

தம்பிலுவில் மயானத்தில் விசேட சோதனை!; இனியபாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய சோதனை நடவடிக்கைகள்

தம்பிலுவில் பொது மயானத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நபரொருவரை கொலை செய்து அப்பகுதியில் புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்கமைய இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமாரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழு இந்த விசாரணைகளை முன்னெடுக்கின்றது.

இதேவேளை, இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமாரினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேலும் 02 சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் ஆகிய சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரும் மட்டக்களப்பு மற்றும் வெலிகந்த ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இனிய பாரதி என அழைக்கப்படும் கே.புஷ்பகுமார், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் நெருங்கி செயற்பட்ட ஒருவராவார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபரான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *