இலங்கை

அமைச்சர்கள் எவரும் உயிரிழக்க விரும்பவில்லை; தேவை ஏற்பட்டால் பாதுகாப்பை பெறுவோம் 

தேவை ஏற்பட்டால் பாதுகாப்பு பெற்றுக்கொள்வோம் என அமைச்சர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவு அறிக்கைகளின் பிரகாரம் தேவை ஏற்பட்டால் பாதுகாப்பு பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு தரப்பின் அறிவுறுத்தல்களை புறக்கணிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அமைச்சர்கள் எவரும் வெறுமனே உயிரிழக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு ஓரளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நாட்டின் தலைவரை பாதுகாப்பதற்கு எவரும் எதிர்ப்பு வெளியிடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்குவதில் எவ்வித தவறும் கிடையாது என்ற போதிலும் தேசிய மக்கள் சக்தி அளித்த வாக்குறுதிகளுக்கு புறம்பாக செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் குற்றச் செயல்கள், போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு காணப்படும் அதிகாரம், அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் போன்றவற்றை கருத்திற் கொண்டால் ஜனாதிபதிக்கு அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பில் ஆட்சி யை பெற்றுக்கொள்ள முன்னர் வெளியிட்ட கருத்துக்களும் தற்போது வெளியிடும் கருத்துக்களும் முற்றிலும் முரண்பாடானவை எனவும் இது சமூகத்தில் கேலிக்குரியதாகியுள்ளது எனவும் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *