செம்மணிப் புதைகுழி ; கட்டி அணைத்தவாறு தாய் குழந்தையின் எலும்புக் கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் போது பெரிய எலும்பு கூடொன்றுடன் சிறிய குழந்தையின் எலும்பு கூடொன்று அணைக்கப்பட்ட விதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.இது தாயினதும் பிள்ளையினதும் எலும்பு கூடுகளாக இருக்கலாமெனக் கருத்தப்படுகிறது.
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நடைபெற்றுவரும் செம்மணி மனிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இரண்டாம் கட்டத்தின் 25 ஆவது நாள் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,விசேடமாக இன்று(நேற்றைய தினம்) அகழ்வுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது ஒரு பெரிய மனித எலும்புக் கூட்டோடு சிறிய குழந்தையினுடைய மனித எலும்பு கூடு அரவணைக்கப்பட்ட விதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அது சுத்தப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு இன்று (நேற்று) காலை முழுமையாக அகழ்ந்த எடுக்கப்பட்டது.
இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்று (நேற்று)புதிதாக 4 எலும்பு கூட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூடுகளில் 3 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியில் சிறிய, பெரிய எலும்பு கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில் அரவணைத்த எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தாயினதும் பிள்ளையினதும் எலும்பு கூடுகளாக இருக்கலாமெனக் கருத்தப்படுகிறது.
ஊடகவியலாளர்களை இங்கு மாலையிலேயே அனுமதிப்பர். பெரிய எலும்பு கூடொன்றுடன் சிறிய குழந்தையின் எலும்பு கூடொன்று அணைத்தாவாறு கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக காலையிலேயே அவை முழுமையாக அகழ்ந்த எடுக்கப்பட்டு விட்டதால் ஊடகவியலாளர்களால் அந்தப் புகைப்படங்களை எடுக்க முடியவில்லை.
![]()