இனிய பாரதியின் மற்றொரு சகா கிரானில் சி.ஜ.டி.யினரால் கைது

இனியபாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை(29) மாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினர் (சிஜடி) கைது செய்துள்ளனர்.
ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை, 2007-6-28 ம் திகதி நடந்த திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி திருக்கோவில் மற்றும் சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர்.
இதில், இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் வெலிகந்தை தீவுச்சேனையை வதைமுகாமில் இருந்து செயற்பட்டுவந்ததாக,இனிய பாரதியின் சகாவான அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பா.சபாபதியை கிரான் வைரவர் கோவில் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று மாலை 4 மணியளவில் சிஜடியினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
இவரை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை சிஜடி யினர் மேற்கொண்டுவருகின்றனர்
இதேவேளை இனியபாரதியை கைது செய்து விசாரணையின் பின்னர் இனிய பாரதியின் முன்னாள் சாரதி செந்தூரன், அவரது சகாவான சந்திவெளியைச் சேர்ந்த சசீந்திரன் தவசீலன் மற்றும் சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டவர் உட்பட இனியபாரதியின் சகாக்கள் 4 பேரை சிஜடி யினர் தொடர்ச்சியாக கைது செய்துவருவதையிட்டு இனியபாரதி மற்றும் பிள்ளையானுடன் தொடர்புபட்டவர்கள் பயப் பீதியில் இருந்துவருவது குறிப்பிடதக்கது.
![]()