அம்பாறையில் ரி.எம்.வி.பி முகாங்கள் மயானங்களில் இரு நாட்களாக சோதனை; இனியபாரதியின் 2 வது சகா கைது

இனிய பாரதியின் சககாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரனை நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை சி.ஜ.டி. யினர் கைது செய்ததுடன் அம்பாறை மாவட்ட தமிழ் பகுதிகளில் கடந்த காலத்தில் இனியபாரதி தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி) கட்சி இயங்கி வந்த முகாங்கள் மற்றும் மயானங்களில் கடந்த இரண்டு தினங்களாக சி.ஜ.டி.யினர் பாரிய சோதனைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 2005 மற்றும் 2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல், மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புபட்ட ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை கடந்த 6ம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர்.
இந்தக் கைதுகளையடுத்து இனியபாரதியின் முன்னாள் சாரதியான செந்துரான் கடந்த 9 ம் திகதி பொத்துவிலில் இருந்து மட்டக்களப்புக்கு தனியார் போக்குவரத்து பஸ்ஸை செலுத்திச் சென்ற போது,அவரை கல்முனை நகரில் வைத்து சிஜடி யினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் இருந்து வந்த சிஜடி யினர், தம்பிலுவில் மகாவித்தியாலயத்துக்கு அருகில் பாடசாலை வீதியில் 2004 ம் ஆண்டு தொடக்கம் இயங்கி வந்த இனிய பாரதியின் காரியாலயத்தை முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வாறே தம்பிலுவில் பிரதான வீதியில் இயங்கி வந்த ரி.எம்.வி.பி முகாம், தம்பட்டையில் இயங்கி வந்த முகாம், திருக்கோவில் மயானம் போன்றவற்றுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள தாளவெட்டுவான் சந்திக்கு அருகாமையில் உள்ள பாரிய வீட்டை, ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்களை வெள்ளை நிற ஆடை அணிந்து இரண்டு வெவ்வேறு ஜீப்களில் அழைத்து வந்து சோதனையிட்னர்.
இதன் பின்னர் சம்மாந்துறையில் செயற்பட்ட முகாம் உட்பட அந்தக் காலப் பகுதியில் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் ரி.எம்.வி.பி முகாங்களாக செயற்பட்ட முகாங்களுக்கும் சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு அங்கு சந்தேகத்துக்கு இடமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளின் நிலத்தை தோண்டி சோதனையிடுவதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த இனிய பாரதியின் சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி விக்கினேஸ்வரனை அவரது வீட்டில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் சிஜடி யினர் கைது செய்து கொழும்புக்கு விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை குற்றப்புலனாய்வுத் துறையின், கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, 2005 மற்றும் 2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல்போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் குறித்து நீண்ட விசாரணையை மேற்கொண்டது.
இந்த விசாரணையில், முதல் சந்தேக நபரான இனியபாரதி, 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய கருணா அம்மான் பிரிவின் திருக்கோவில் பகுதியில் உள்ள ஆயுதமேந்திய முகாமின் தலைவராகப் பணியாற்றியவர்.
இவர் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் கருணா பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பதுடன் 2012 முதல் 2015 வரை அந்தப் பிரிவு பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியபோது பல படுகொலைகள் மற்றும் ஆட்கள் கடத்திக் காணாமல்ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
![]()