இலங்கை

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி திருமலை சிவன் கோவில் முன்பாக சனிக்கிழமை பாரிய மக்கள் போராட்டம்

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக காலை 10 மணியளவில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் காலை 10 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் செம்மணி மனித புதைகுழி பகுதியிலும், முல்லைத்தீவில் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையிலும், கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையிலும், வவுனியாவில் புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையிலும், மன்னாரில் நகர்ப்பகுதியிலும், அம்பாறையில் திருக்கோவில் பகுதியிலும், மட்டக்களப்பில் காந்திப் பூங்கா பகுதியிலும் நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையைக் கோரும் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்களின் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக “மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூக கூட்டிணைவு” கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தின் முன்பாக காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *