படுகொலையாளிகளைப் பாதுகாத்த ராஜபக்சக்கள்; உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினர்

வெள்ளை வான் கடத்தல்காரர்களையும் படு கொலையாளிகளையும் பாதுகாத்தவர்கள் ராஜபக்சக்கள். எனவே எம்மிடம் வாய் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ நாமல் ராஜபக்சவை எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வேலையாட்களின் வரவு செலவுத்திட்ட நிவாரணப்படி திருத்த சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்த பட்ச வேதன திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ உரையாற்றிக் கொண்டிருந்தபோது இராதாகிருஷ்ணன் எம்.பி ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.
ஆனால் அதனை பெரிதாக செவிமடுக்காத தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, எதிராளிகளாகவிருந்த சஜித் பிரேமதாச ,நாமல் ராஜபக்ச ,தயாசிறி ஜயசேகர ,நீந்கள் எல்லோரும் கொழும்பு மாநகரசபை ஆட்சியை கைப்பற்ற ஒன்றிணைந்தீர்கள். ஊடகச் சந்திப்புகளை நடத்தினீர்கள். எதிர்கால நண்பர்களாகினீர்கள் என்றார்.
இதன்போது குறுக்கிட்ட நாமல் ராஜபக்ச எம்.பி. ஏன் நீங்களும் எமது நண்பர்தானே என்றார்.
இதனால் கோபமடைந்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ , நீங்கள் நல்லவர்களா? தாஜுதீனைக் கொன்றவர்கள்.படு கொலையாளிகளை, வெள்ளை வான் கடத்தல்காரர்களை பாதுகாத்தவர்கள். உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினர். சரத் பொன்சேகாவை என்ன செய்தீர்கள்? உங்களை எதிர்ப்பவர்களை இருக்க விட்டீர்களா?ஆகவே என்னிடம் வாய் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம் என்றார்.
![]()