உலகம்
அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் செம்மணிக்கு சர்வதேச நீதி கோரி பேரணி!… நவீனன்

செம்மணி புதைகுழிகளில் இருந்து ஆதாரங்கள் மீண்டும் வெளிவந்ததைத் தொடர்ந்து, ஈழத்தில் நடந்து வரும் இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலைக் கோரி, அனைத்து ஈழத் தமிழ் அவுஸ்திரேலிய அமைப்புகளும் ஜூலை 21, 2025 மதியம் 12 மணிக்கு கன்பராவில் மாபெரும் கண்டன பேரணி நடத்தியுள்ளனர்.
இந்தப் பேரணியில் பெருமளவு தமிழர்கள் கலந்து கொண்டனர். இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே தொடங்கிய பேரணி அவுஸ்திரேலியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகங்கள் உட்பட முக்கிய தூதரகங்கள நோக்கி நடைபெற்றது.
ஈழத் தமிழர்கள் மீது தொடர்ந்து வரும் இனவழிப்பின் அன்மைய சாட்சியாக
செம்மணி மனிதப் புதைகுழியானது ஈழத் தமிழர்களின் மீது இலங்கை அரச பயங்கரவாதத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் பேரவவலத்தின் சிறு சாட்சியம் மட்டுமே.
குறிப்பாக 1996 ஆம் ஆண்டில் சிறிலங்கா அரச படைகளால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பதினாறு வயதுகளே நிரம்பிய பாடசாலை மாணவியின் விவகாரம் ஊடாகவே இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.
இப் படுகொலைக்கு முன்னராக 1995 ம் ஆண்டு யாழ்ப்பாணம் இடப்பெயர்வுக் காலங்களிலும் அதன் பின்னரான காலப்பகுதிகளிலும் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உள்ளடங்களாகப் பல நூற்றுக் கணக்கானவர்கள் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்து புதைக்கப்பட்டார்கள் என்பதனை நிரூபிக்கும் வகையில் கிருசாந்தி படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சிறிலங்கா அரச படைச் சிப்பாயின் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில் 1999 ஆம் ஆண்டு இணங்காட்டப்பட்டு பதினைந்து மனித என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டன.
தமிழ் மக்களினதும் சர்வதேச சமூகத்தினரதும் தொடர்ச்சியான அழுத்தம் மூலமே இதுவரை பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதுபற்றிய கவனயீர்ப்பு நிகழ்வு அணையாவிளக்கு போராட்டமாக தாயகத்தில் மக்காளால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.
அதன் தொடர்ச்சியாகவே 21/07/2025 திங்கட்கிழமை அன்று சர்வதேச கவனயீர்ப்பு பேரணியாக அவுஸ்திரேலியாவில் இயங்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து தலைநகர் கான்பராவில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாக ஆரம்பமாகி நடைபெற்றது.
இப்பேரணியானது மதியம் 12 மணிக்கு சிறிலங்கா தூதுவரகத்துக்கு முன்பாக பாரிய கவனயீர்ப்பு போரட்டத்துடன், ஆரம்பித்து, பன்னாட்டு தூதுவரகங்கள் மற்றும் ஐநா தூதுவரகம் வழியாக சென்று அவுஸ்திரேலிய வெளி விவகார துறை அமைச்சு அலுவலகத்தில் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.

![]()