இந்தியா

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர்; அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது; இதில் எந்த விதமான குழப்பமும் இல்லை” என முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கூறி இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, “அதிமுகவிலிருந்து ஒருவர்தான் முதல்வராக இருப்பார்” என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இது, எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு ஒருவரை முதல்வராக பாஜக நினைக்கிறதா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அண்ணாமலையின் இன்றைய பேச்சு அந்த குழப்பத்தை முழுமையாக தெளிவுபடுத்தியுள்ளது.

“2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை அறிவித்துவிட்டோம், இதில் எந்த குழப்பமும் இல்லை” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதன் மூலம் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பத்திற்கு ஒரு தெளிவான விடை கிடைத்துவிட்டது என்பது உறுதியாகியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில், அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி நேற்று தனது பிரச்சாரத்தில் கூறியிருந்தார். இதை பாஜக ஒப்புக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அரசியல் விமர்சகர்கள் இது குறித்து கூறுகையில், அதிமுகவாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி, ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதிகள் கிடைத்துவிட்டால் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் அல்லது அதிகாரத்தில் இடம் இருக்காது. ஆனால் அதே நேரத்தில், 118 தொகுதிகளுக்குக் கீழ் அதிமுகவோ அல்லது திமுகவோ பெற்றால் கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் ஏற்படும். இதுதான் யதார்த்த நிலை என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே, அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக உறுதிப்படுத்தியிருந்தாலும், ஆட்சியதிகாரப் பகிர்வு குறித்த விவாதம் தொடர்ந்து நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *