இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: கருதினாலின் ‘கோரிக்கையின் பேரில்’ நியமனங்களுக்கு SLPP எதிர்ப்பு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளைக் கவனிக்கும் முக்கிய பதவிகளுக்கு இரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் கத்தோலிக்க சமூகத்தின் கோரிக்கையின் பேரில் நியமிக்கப்பட்டதாக அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை குறித்து, எதிர்க்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோர் கொழும்பு பேராயர் மல்கம் கருதினல் ரஞ்சித் உட்பட கத்தோலிக்க திருச்சபையின் கோரிக்கையின் பேரில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைகளை மேற்பார்வையிடக்கூடிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதாக அண்மையில் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்த கூற்றை SLPP உறுப்பினர் சாந்த பண்டார சுட்டிக்காட்டினார். அத்தகைய நியமனங்கள் ஒருவரின் கோரிக்கைகளின் அடிப்படையில் மட்டும் அமையக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், இத்தகைய கோரிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு SLPP எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றாலும், அத்தகைய உயர்மட்ட நியமனங்களை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று தெளிவுபடுத்தினார். பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்ற அதிகாரிகள் அத்தகைய பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அவ்வாறு செய்யத் தவறினால் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழக்கும் என்று மேலும் தெரிவித்தார்.

“நாம் கருதினலை மதிக்கிறோம். இருப்பினும், ஒரு நாட்டை ஆட்சி செய்வது என்பது வேறு விடயம்” என்று பண்டார கூறினார். “நாட்டை ஆட்சி செய்வது பற்றி (அரசாங்கத்தின் சார்பில்) ஒரு சிறந்த புரிதல் இருக்க வேண்டும் என்றும், கார்டினல் அல்லது வேறு எவரேனும் செய்யும் கோரிக்கைகளின் அடிப்படையில் முடிவுகளை மற்றும் நியமனங்களை மேற்கொள்வதைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்றும் நாங்கள் கருதுகிறோம்” என்று பண்டார மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *