காசாவில் இஸ்ரேல் திடீர் தாக்குதல்; பலி எண்ணிக்கை 58,000ஐ கடந்தது

இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பிணைக் கைதிகளாக சிறைபிடித்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து, அவர்களை மீட்பதற்காக காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. கடந்த 21 மாதமாக நடந்து வரும் போரில், காசா பகுதியில் 58,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 1 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் நேற்று (13) நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பலர் தண்ணீர் பிடிக்கச் சென்றவர்கள் என்ற தகவல் வெளியாகியது.
இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியதும் அவர்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர். எனினும், பலர் தாக்குதலில் பாதிக்கப்பட்டு, அப்படியே தரையில் சாய்ந்தனர். போர் நிறுத்தம் பற்றி விவாதித்து வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
![]()