இந்தியா

எயார் இந்திய விமான விபத்து – விசாரணை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட எயார் இந்திய விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விடுதி மற்றும் அருகில் உள்ளவர்கள் 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 260 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், அகமதாபாத் விமான விபத்துக்கு என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே காரணம் என 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே எரிபொருள் விநியோகம் தடைபட்டதால் 2 இயந்திரங்களும் செயலிழந்ததாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், 2 விமானிகள் பேசிக்கொண்ட தகவல்களும் வெளியாகியுள்ளன. ஒரு விமானி, தனது சக விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு நான் அந்த வால்வை அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

விமானத்தின் 2 இயந்திரங்களும் செயலிழந்த நிலையில், RAT (Ram Air Turbine) என்ற அமைப்பு மூலம் விமானத்தை அவசரமாக இயக்க முயற்சி நடந்துள்ளது. அப்போது எரிபொருள் செல்லும் 2 வால்வுகளும் மீண்டும் செயல்பட தொடங்கி ஒரு இயந்திரம் மட்டுமே செயற்பட்டுள்ளது. இதனால் விமானம் மேல் செல்ல முடியாமல் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முழுவதுமாக சேதமடைய காரணம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட அறிக்கை தற்போது வெளியான நிலையில் முழுமையான அறிக்கை வர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *