இலங்கை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; பல புதிய தகவல்கள் வெளியாகின்றன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளில் வெளிவரும் புதிய தகவல்கள் தேவையான நேர்த்தில் மக்களுக்கு அறிவிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்விவினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை எத்தனை? அந்த ஆணைக்குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?வென சமிந்த விஜேசிறி எம்.பி. கேள்வி எழுப்பினார்

இதற்கு பிரதமர் ஹரிணி பதிலளிக்கையிலேயே ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் புலனாய்வுசெய்து விசாரணை மேற்கொள்ள ஒரு ஆணைக்குழுவே அமைக்கப்பட்டிருந்தது. அந்த ஆணைக்குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனப்தசில்வா,மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நிஹால் சுனில்ராஜபக்ஸ , மேல் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அத்தபத்து லியனகே, ஓய்வுபெற்ற அமைச்சு செயலாளர் டபிள்யூ.என்,எம்,ஆர்.அதிகாரி ஆகியோர் அடங்குகின்றளர். அந்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை 2021 02,25அம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அதுதொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. அதற்கமைய சட்டமா அதிபரால் பரிந்துரைக்கப்படும் இறுதி பரிந்துரையை அடிப்படையாகக்கொண்டு எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு, ஜனாதிபதி விசாரணை குழுவினால் வழங்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலாேசனையின் பிரகாரம் முறையாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதன்போது சமிந்த விஜேசிறி எம்.பி. மேலதிக கேள்வி ஒன்றை எழுப்பி,தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் தற்போது அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்துள்ளார் என்பதை அவர் ஏற்றுக்கொண்டதுடன் இந்த தாக்குதலுக்கு அரச புலனாய்வு பிரிவில் சில அதிகாரிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருப்பதாக அவர் இந்த சபையில் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச அதிகாரிகளை விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அப்படியானால் இவர்கள் இரண்டு பேரும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சில விடயங்களை அறிந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அதனால் இந்த விசாரணை அறிக்கையை பரிசோதிக்கும்போது வெளிப்படைத்தன்மையும் மேற்கொள்வதாக உறுதியாளிக்க முடியுமா? எனக்கேட்டார்.

இதற்கு பிரதமர் பதிலளிக்கையில், இந்த விசாரணைகளை நாங்கள் மேற்கொள்வோம். இதில் இருந்து தப்பிச் செல்லப்போவதில்லை. நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருவதன் மூலம் பல புதிய விடயங்கள் வெளிவந்துள்ளன. அந்த விடயங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கிறோம். அதனால் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையில் மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதுவும் கிடையாது . நாங்கள் இந்த விசாரணைகளை சரியான முறையில் மேற்கொண்டு, விசாரணைகளில் இருந்து வெளிவரும் விடயங்களை தேவையான நேரத்தில் மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *