வடக்கில் அரச இயந்திரத்தின் அடாவடி எல்லை மீறுகின்றதா?

தமிழர் தாயகத்தில் வடக்கு மாகாணத்தில் அரச இயந்திரத்தின் பல்வேறு திணைக்களங்கள் சட்ட ஒழுங்குகளை மீறி தான்தோன்றித் தனமாக நடந்து கொள்கின்றன.எனவே வடக்கில் அரச இயந்திரத்தின் அடாவடிகள் எல்லை மீறுகின்றதா என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக சபா குகதாஸ் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழர் தாயகத்தில் வடக்கு மாகாணத்தில் அரச இயந்திரத்தின் பல்வேறு திணைக்களங்கள் சட்ட ஒழுங்குகளை மீறி தான்தோன்றித் தனமாக நடந்து கொள்கின்றன. இதனை தடுக்க அரசாங்கம் ஏன் உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ளவில்லை? தடுக்கா விட்டால் அரசின் பின்னணியில் தான் நடக்கிறதா?போன்ற கேள்விகளுடன் பாதிக்கப்பட்ட மக்கள் குரல் எழுப்புகின்றனர்.
வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் வனவள திணைக்களத்தின் ஆதரவுடன் காடுகளை அழித்து புதிய சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன வவுனியாவில் பொலிசார் தனியார் காணிக்குள் சட்டவிரோதமாக பௌத்த விகாரை கட்ட நிலம் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வடமாராட்சி கிழக்கு சுண்டிக்குளத்தில் கடற்படை நில அளவீட்டில் இறங்கியுள்ளனர் அத்துடன் கள்ள மணல் ஏற்றும் நடவடிக்கையில் பொலிசாரின் டிப்பர்களும் ஈடுபடுகின்றன என வடக்கு ஆளுநரின் கூட்டத்தில் நேரடியாக முறைப்பாடு அத்துடன் கடத்திலின் பின்னணியில் பொலிசார் உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் வழக்கு தொடுநர்களை புலனாய்வாளர் அச்சுறுத்தல் புதைகுழி உள்ள இடத்தில் மர்ம வாகனம் சுற்றியமை தென்னிலங்கையில் செம்மணி விவகாரம் தொடர்பில் இனவாதம் பேசுதல் பொய்யான தகவல்களை வெளியிடுதல் போன்ற அடாவடிகளில் பலரும் இறங்கியுள்ளமை இறங்கிய அனைவரும் கடந்த ஆட்சியாளரின் காலத்தில் அரசுடனும் இராணுவ புலனாய்வு இயந்திரத்துடனும் இயங்கியவர்கள் அவர்களை தற்போதைய ஆட்சியாளர்களும் பயன்படுத்துகின்றார்களா? இல்லையென்றால் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை.
இனவாதம் அற்ற சட்டவாட்சியே எமது இலக்கு என வரிக்கு வரி மேடைக்கு மேடை கூறும் அநுர அரசு வடக்கில் சட்டவிரோத செயற்பாட்டை அரச இயந்திரத்தின் மூலம் மேற் கொள்ள அனுமதித்துள்ளதா? அல்லது ஐனாதிபதி அநுரவை தாண்டி ஐனாதிபதியின் அதிகாரத்தை பிறிதொருவர் கையாளுகின்றாரா? வடக்கு மக்களிடம் எழுந்துள்ள சந்தேகம்.
கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் இருப்பை கபளீகரம் செய்வதில் அநுர அரசும் மிக தீவிரமாக உள்ளது ஆட்சியின் வடிவம் மோதகம் கொழுக்கட்டையாக மாறியதே தவிர உள்ளடக்கம் மாறவில்லை –
![]()