இலங்கை

டிரம்புடன் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பியுங்கள்; ஒத்துழைப்பு வழங்கத் தயார்! ஹர்ஷ டி சில்வா அறிவிப்பு

இலங்கைக்கு விதிக்கப்பட்ட வரியை 44 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அதிகரித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இதனை சிறந்த ஆரம்பமாகக் கருதி மீண்டும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அரசியலுக்கு அப்பால் இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையும் போட்டித்தன்மைக்குள் உள்வாங்கப்பட வேண்டுமெனில் எம்முடன் போட்டியிடும் அமெரிக்காவின் சந்தையிலுள்ள ஏனைய நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

எம்முடன் அதிக போட்டி தன்மை கொண்ட நாடு வியட்நாமுக்கு 20 சதவீதமும், பங்களாதேஷூக்கு 35 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பங்களாதேஷ் தற்போதும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.

இது ஜே.வி.பி. அரசாங்கமா அல்லது ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமா என்பது எமது கவலையல்ல. அனைத்து தரப்பினரும் ஏற்றுமதி தொழிற்துறையுடன் தொடர்புபட்டுள்ளனர்.

360, 000 தொழிலாளர்கள் ஆடை ஏற்றுமதித்துறையை சார்ந்தவர்களாகவுள்ளனர். மேலும் 550 000 தொழிலாளர்கள் மறைமுகமாக இத்துறையுடன் தொடர்புடையவர்களாகவுள்ளனர். எனவே நாம் அரசியலை புறந்தள்ளி நாட்டுக்காக முன்வர வேண்டும். என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *