குழந்தையின் உடலைச் சுற்றி ஆணிகள் அடிக்கப்பட்டதா?; மீட்கப்பட்ட எலும்புக் கூட்டை அது போன்ற தடயங்கள்

செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஒன்று அல்லது இரண்டு வயது வயதுக்குட்பட்ட பிள்ளையொன்றின் எலும்புக் கூட்டை சுற்றி ஆணிகள் அடிக்கப்பட்டதை ஒத்த எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை வரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் புதிதாக அகழப்படும் புதைகுழியிலும் மண்டையோடொன்று அவதானிக்கப்பட்டது.
இந்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பத்தாம் நாள் நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், தொல்லியல் துறை விரிவுரையாளர்கள் பிரசன்னமாகி தொல்லியல் துறை மாணவர்கள் மேற்கொள்ளும் அகழ்வுப் பணிகளை அவதானித்தனர்.
சனிக்கிழமை வரை மொத்தமாக 45 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 42 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை புதிதாக சனிக்கிழமை மூன்று எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டன.
செய்மதிப்படம் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு அகழப்படும் சந்தேகத்துக்கிடமான பகுதியில் மண்டையோடு ஒன்றும் அவதானிக்கப்பட்டது.
ஒன்று அல்லது இரண்டு வயது வயதுக்குட்பட்ட பிள்ளையொன்றின் எலும்புக் கூட்டை சுற்றி ஆணிகள் அடிக்கப்பட்டடதை ஒத்த எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
துப்பாக்கிகளின் காணப்படுகின்ற பரல் என்ற சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் பிரிவினர் அந்தப் பொருளை அகழ்ந்தெடுத்து நீதிமன்ற கட்டுக்காவலுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்றார்.
![]()