இலங்கை

வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை

“சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. எனவே, வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின்போது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது, வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு சம்பந்தமாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு
‘வடக்கு, கிழக்கில் புலிகளின் மனோநிலையில் வாழும் சிலரும் இருக்கவே செய்கின்றனர்.

புலிகளின் நிகழ்ச்சி நிரல் குறித்து கனவு காணும் தரப்பினரும் உள்ளனர். அனைத்து மக்களும் அல்லர். ஒரு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையானோர் அவ்வாறு இருக்கலாம்.

அதேபோல புலிகளை ஆசிர்வதித்த அரசியல்வாதிகள் உள்ளனர். புலிகளை மீள் எழுச்சி பெற வைப்பதற்கு முற்படும் டயஸ்போரா குழுவொன்றும் உள்ளது.

இப்படியான அச்சுறுத்தல் இருப்பதால், போர் மூண்ட பிறகு முகாம்கள் அமைப்பது பற்றி சிந்திக்காமல், தூர நோக்கு சிந்தனை அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் முகாம்கள் இருக்க வேண்டும். அதற்காக போர் காலத்தில் இருந்ததுபோல் அல்ல. பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையில் நகர்வுகள் இடம்பெறவேண்டும்.

யாழில் உள்ள பாதுகாப்பை பலவீனப்படுத்தினால் அது யாழ். மக்களுக்குதான் சரி இல்லை. ஆவா என்ற பாதாள குழுவொன்று இருந்தது. கேரள கஞ்சாக்கள் வருகின்றன. வீதித்தடைகளை நீக்கினால் தெற்கிலுள்ள பாதாளக்குழுக்கள் வடக்குக்கு சென்று ஒளியக்கூடும். எனவே, பாதுகாப்பு நெறிமுறைகள் அவசியம்.

சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கு இல்லை என்பதை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.” -என்றார் பொன்சேகா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *