இலங்கை

செம்மணி போராட்டக் களத்தில் பதற்றம் – சிவஞானம் உள்ளிட்ட சிலரை வெளியேற்றிய மக்கள்

யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்று வரும் அணையா விளக்கு இறுதி நாள் போராட்டத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டக் களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்டோர் வருகைத் தந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து சாணக்கியன் உள்ளிட்ட சிலர் வெளியேறிச் சென்றனர். இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும்
சென்றிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் அவரை அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றினர்.

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம் எனும் தொனிப் பொருளில் சர்வதேச நீதி கோரி நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் மூன்றாவது நாளான இன்று மிகவும் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.

அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று கோரிக்கை மனுவொன்றினையும் ஆணையாளரிடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *