இந்தியா

விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்திய சீமானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு மீள பெறப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை மேல் நீதிமன்றத்தில், சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்திருந்த மனுவில்,

“நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, போர் முனையில் சந்தித்து பேசியதாகவும் அதன் பிறகு ஏகே 47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் இலங்கை போர் தொடர்பில் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகின்றார்.

குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனின் படத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தி வருகின்றார்.

எனவே, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு மனு அளித்த 15 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதனை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *