இலங்கை

28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கத்தின் செல்வாக்கு மிக்க அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு (IAID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த நபர்கள் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி குறித்த சொத்துக்களை வாங்கியதாக எழுந்த முறைப்பாடுகளுக்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் இயங்கும் IAID இந்த விசாரணையைத் ஆரம்பித்துள்ளது.

இதன்படி, நாமல் ராஜபக்ஷ, மஹிந்த யாப்பா அபேவர்தன, மஹிந்த அமரவீர, சாமர சம்பத் தசநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, கஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, ஜானக திசகுட்டி ஆராச்சி, வஜிர அபேவர்தன, மஹிபால ஹேரத், அநுர பிரியதர்ஷன யாப்பா, மனுஷ நாணயக்கார, வடிவேல் சுரேஸ், துஷார சஞ்சீவ பத்திரன, ஹர்ஷன ராஜகருணா, சாணக்கியன் இராசமாணிக்கம், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சாந்த அபேசேகர ஆகியோரும் உரிய விசாரணையில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் இவர்கள் குறித்த பிரிவுக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் சொத்துக்கள் தொடர்பாகவும் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விசாரணையின்போது, யாரேனும் முறைகேடான ஆதாயங்கள் மூலம் சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *