அச்சுவேலி கூட்டுறவு சங்கத்திற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிலுவையை விட்டு சென்ற இராணுவம்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை அலுவலக கட்டடத்தில் 30 வருட காலங்களுக்கு மேலாக நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்தை நிலுவையாக விட்டு சென்றுள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக குறித்த கட்டடத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த கட்டடத்தை விட்டு வெளியேறி , கட்டடத்தினை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினரிடம் கையளித்தனர்.
அந்நிலையில் ,கட்டடத்தின் மின் கட்டண நிலுவையாக ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் காணப்படுவதாகவும் , கட்டட புனரமைக்கு வேலைகளுக்கு நிதி இல்லாமல் , பிரதேச செயலகத்திடம் கேட்டுள்ள நிலையில் , நிலுவையில் உள்ள பெரும் நிதியினை தாம் எவ்வாறு செலுத்துவது என பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினர் பிரதேச செயலரிடம் தெரிவித்துள்ளனர்.
அதற்கு மின் கட்டணத்தை இராணுவத்தினரே செலுத்துமாறு யாழ் . மாவட்ட கட்டளை தளபதிக்கு கடிதம் மூலம் உரிய அறிவுறுத்தலை வழங்குவதாக பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.
![]()