உலகம்

3000 கார்களுடன் தீப்பிடித்த கப்பல் – ஆறு நாட்களாகியும் அணையாத தீ

சீனாவிலிருந்து மெக்சிகோவிற்கு 3,000 கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் அலாஸ்கா கடற்பகுதியில் தீப்பிடித்தது. கடந்த ஜூன் மூன்றாம் திகதி நடந்த சம்பவத்திற்குப் பின்னரும் கப்பலில் ஏற்பட்ட தீ, ஆறு நாட்களாகியும் அணையவில்லை.

மோர்னிங் மிடாஸ் என்ற கப்பல் தீப்பிடித்தது. அதில் 22 பணியாளர்கள் இருந்தனர். தீயை அணைக்க முடியாமல் அலாஸ்கா கடற்கரையில் உள்ள அலூடியன் தீவுகளுக்கு அருகே கப்பலை கைவிட்டு குழுவினர் தப்பினர்.

கப்பலில் உள்ள 3,000 கார்களில் 70 மின்சார கார்களும், 680 கலப்பின கார்களும் அடங்கும்.

லித்தியம்-அயன் பேட்டரிகளில் ஏற்பட்ட தீயினால் தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. கப்பலில் இன்னும் 350 மெட்ரிக் தொன் எரிபொருளும், 1,530 மெட்ரிக் தொன் சல்பர் எரிபொருளும் மீதமுள்ளன.

அமெரிக்க கடலோர காவல்படை பல நாட்களாக மீட்புப் பணிகளுக்கு தலைமை தாங்கி வருகிறது. பல கப்பல்களும் ஒரு இழுவைப் படகும் சம்பவ இடத்தில் உள்ளன. ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்தை கண்காணித்து வருகின்றன.

சம்பவ இடத்தில் கடல் மாசுபாட்டிற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை இல்லை என்றும், பல நாட்களாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தாலும், தண்ணீரில் கப்பல் நிலை சாதாரணமாக இருப்பதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

மோர்னிங் மிடாஸ் என்பது லைபீரியக் கொடியுடன் 2006 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கப்பல் ஆகும். இது மே 26 அன்று சீனாவிலிருந்து 3,000 க்கும் மேற்பட்ட கார்களுடன் புறப்பட்டது.

ஜூன் 15ஆம் திகதி மெக்சிகோவை வந்தடைய திட்டமிடப்பட்டது. கடல்சார் நிபுணர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து மீட்பு நடவடிக்கையைத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *