இலங்கை

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களின் விபரங்களை நான் பகிரங்கப்படுத்துவேன் 

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் பெல்ஜியம், அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கிறார்கள். முறைகேடு குறித்து விசாரணைகளை மேற்கொள்வதை விடுத்து முறைப்பாடளித்தவர்களை விசாரிப்பது நியாயமற்றது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் திங்கட்கிழமை (09) முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

சுங்கத்தின் இருந்து எவ்விதமான பரிசோதனைகளுமின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக சுங்க தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டனர். அத்துடன் துறைமுக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தான் இந்த கொள்கலன்களை விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கொள்கலன்களில் இருந்த பொருட்கள் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. சுங்கத்திணைக்களம் கடந்த ஓரிரு மாதங்களில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு தற்போது பிறிதொன்றை குறிப்பிடுகிறது. இந்த கொள்கலன்களில் இருந்த பொருட்கள் தொடர்பான விபரங்களை நான் பகிரங்கப்படுத்துவேன்.

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் பெல்ஜியம், அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக முதலில் பயணத்தடை விதிக்க வேண்டும்.முறைகேடு குறித்து விசாரணைகளை மேற்கொள்வதை விடுத்து முறைப்பாடளித்தவர்களை விசாரிப்பது நியாயமற்றது.

என்னை அச்சுறுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அத்துடன் சிறைக்கு அனுப்புவதற்கும் பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் எந்த முயற்சியும் வெற்றிப்பெறாது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *