இந்தியாவின் ஆட்சிமுறை எதிர்கொள்ளும் சவால்கள்!… நியூசிலாந்து சிற்சபேசன்

இந்தியாவினுடைய சனத்தொகை உலகிலேயே உச்சமானது என்பது பரவலாகத் தெரிந்த விடயமாகும். அதிலே, மாநிலங்களின் பங்கு அதிகம் பேசப்படுவதில்லை.
பத்து கோடிக்கும் அதிகமான சனத்தொகையை, பதினைந்து வரையான உலகநாடுகள் கொண்டிருக்கின்றன. அதனிலும் அதிகமான சனத்தொகையை இந்தியாவின் பல மாநிலங்களும் கொண்டிருக்கின்றன என்பது அதிகம் கவனிக்கப்படுவதில்லை.
1947க்குப் பின்னர் ஒரு தேசமாகவே இந்தியா நிலைபெற்றிருக்கின்றது. அதன்பொருட்டு இந்தியா எதிர்கொண்ட சவால்களின் பட்டியல் நீளமானது.
1947, 1965, 1971, 1999 என நான்கு தடவை பாகிஸ்தானுடன் நேரடி யுத்தம். அதனையும் கடந்து முடிவின்றித் தொடரும் காஷ்மீர் விவகாரம். 1962ல் சீனாவுடன் யுத்தம். 1984 முதல் 2003 வரையான காலப்பகுதியில் சியாச்சன் மோதல்கள். 2025ல் பால்கம் தாக்குதல். அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் சிந்தூர் நடவடிக்கை.
பாஞ்சாபில் பிரிவினைவாதம். ஆந்திராவில் நக்சலைட் கிளர்ச்சி. வட கிழக்கு மாநிலங்களில் அண்டை நாட்டின் நோண்டல்கள்.

இந்தி திணிப்பு, அதற்கு எதிர்வினையாக இந்தி எதிர்ப்பு, அவசரகால சட்டம், இட ஒதுக்கீடு விவகாரம், மண்டல் கமிஷன் அறிக்கை, ஷா பாணு வழக்கு, அயோத்தி ராமர் கோவில் விவகாரம் என சவால்களின் பட்டியல் நீளமானதாகும்.
“தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்” என்னும் மகாகவி பாரதியின் வரிகளுக்கு உயிர்கொடுத்து இந்தியா ஒரு தேசமாகவே சவால்களை எதிர்கொள்கின்றது.
இந்தியா ஒன்றிய ஆட்சி முறையைக் கொண்டது. அதிலே இருபத்தியெட்டு மாநிலங்களும், எட்டு ஒன்றியப் பிரதேசங்களும் காணப்படுகின்றன. ஒன்றிய அரசும், மாநில அரசும் ஆட்சியதிகாரங்களைப் பகிர்ந்து கொள்கின்றன.
பாதுகாப்பு, வெளிவிவகாரம், வருமானவரி போன்ற விடயங்களை ஒன்றிய அரசு கவனித்துக்கொள்கின்றது. கல்வி, சுகாதாரம், காணி, விவசாயம், பொலிஸ் போன்ற விடயங்களை மாநிலங்கள் கவனித்துக்கொள்கின்றன.
ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் அதிகார வரையறைகளை அரசியலமைப்பு வரையறுக்கின்றது. இருந்தபோதிலும், அதிகார மீறல்கள் அவ்வப்போது ஏற்பட்டுவிடுகின்றன. மாநிலங்களின் அதிகாரங்களை, கபளீகரம் செய்வதற்கு வலுவான ஒன்றிய அரசு முற்படுவதுவும், அதனை மாநிலங்கள் எதிர்ப்பதுவும் காலாதிகாலமாகவே நடைபெறுவதாகும்.
அந்தவகையிலேயே, தற்போதைய மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு, மாநிலங்களுடன் பகிரவேண்டிய நிதி, மும்மொழி கொள்கை போன்ற விடயங்களையும் கருதமுடிகின்றது.
தொகுதி மறுசீரமைப்பு முயற்சி என்பது ஆட்சியமைப்பில் நிலைபேறான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
தற்போதைய இந்தியப் பாராளுமன்றத்திலே 542 ஆசனங்கள் உள்ளன. அஃது 1977 தேர்தலின்போது வரையறுக்கப்பட்ட தொகுதிகளாகும்.
அன்றைய வாக்காளர் தொகை முப்பத்தியிரண்டு கோடியாகும். சராசரியாக ஆறு லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு தொகுதி என்பது அன்றைய ஏற்பாடாகும். அதுவே, பதினெட்டு லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு தொகுதி என, சனத்தொகை அதிகரிப்பினால், தற்போது காணப்படுகின்றது. அதனால், பிரதிநிதித்துவ விகிதத்தை மேம்படுத்தவே “தொகுதி மறுசீரமைப்பு” திட்டம் முன்வைக்கப்படுகின்றது. அஃது நியாயமானதும் கூட.
தென்மாநிலங்கள் சனத்தொகை அதிகரிப்பை, ஒப்பீட்டளவில், கட்டுப்படுத்தியுள்ளன. ஆனால், உத்தரப்பிரதேசம், பீஹார் போன்ற வடமாநிலங்கள் சனத்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவில்லை.
அதனால் சனத்தொகைக்கேற்ப “தொகுதி மறுசீரமைப்பு” மேற்கொள்ளப்படுகின்றபோது, வடமாநிலங்களுடைய தொகுதிகள் அதிகரிப்பதுவும், தென்மாநிலங்களுடைய தொகுதிகள் குறைவதுவும் தவிர்க்க முடியாததாகலாம்.
ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்வதெனில், தற்போது தமிழ்நாட்டில் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அதன்படி 7.19% விழுக்காடு பெறுமதியான ஆசனங்களைத் தமிழ்நாடு கொண்டிருக்கின்றது.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கும்போது, தற்போதைய விகிதாசாரப்படி தமிழ்நாட்டிற்கு 61 தொகுதிகள் கிடைக்கவேண்டும். ஆனால், சனத்தொகை அடிப்படையிலே 44 அல்லது 45 தொகுதிகள் மட்டுமே கிடைக்கலாம்.
ஆக, சனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியதற்காக தென்மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடிய சூழலையே “தொகுதி மறுசீரமைப்பு” ஏற்படுத்தலாம் என்னும் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது.
மற்றுமொருமுனையில், தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, நீட் தேர்வு போன்றவை மாநிலங்களின் சுயாட்சியைக் கபளீகரம் செய்யக்கூடிய எத்தனத்தையே வெளிப்படுத்துகின்றன. இவையனைத்திலுமே, இந்தி திணிப்பு என்பது மறைகரமாகவே தெரிகின்றது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அபாரமான பொருளாதார வளர்ச்சியைத் துரத்திப்பிடிக்கின்றன. அதனால் கணிசமான வரிவருமானத்தை ஈட்டுகின்றன. அத்தகைய வருவாய்க்கு இணையான நிதியை, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க ஒன்றிய அரசு மறுக்கின்ற சூழ்நிலை காணப்படுகின்றது.
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காவிடில் கல்வி மேம்பாட்டு நிதிகளை விடுவிப்பதில்
தாமதம், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை விடுவிப்பதில் தாமதம், பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீட்டில் தாமதம் என “மாற்றாந்தாய்” மனநிலையையே காணமுடிகின்றது.
தேசம் முழுவதுக்கும் ஒரே தேர்தல், தேசம் முழுவதுக்கும் ஒரே மொழி போன்ற கோஷங்கள் டெல்லி அதிகாரப் படிக்கட்டுகளில் அதிர்கின்றன.
அதனாலேயே, மாநில உரிமைக் குரல்களும் உரத்து ஒலிக்க ஆரம்பிக்கின்றன.
ஆனால், இந்தியாவுக்குச் சவால்கள் புதியதல்ல. எண்ணிலடங்காத சவால்களைக் கடந்தே ஒரு சனநாயகத் தேசமாக நிலைபெறுகின்றது. “ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?” என்னும் ஓர்மமே நம்பிக்கையின் நாற்றுமேடையாகின்றது. அதுவே, இந்தியாவின் பலமாகும்.
![]()
இந்தியா ஒன்றிய ஆட்சி முறையைக் கொண்டது – “ஒன்றியம்” என்கின்ற பதத்தை பார்த்து மகிழ்ச்சி.
இந்த கட்டுரை மிகவும் புரிதலுடனும் கவனிப்புடனும் எழுதப்பட்டுள்ளது.