இலங்கை

செம்மணிப் புதைகுழியில் 7 எலும்புக்கூடுகள் மீட்பு

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று வரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த இடத்தில் சிறுவர்கள், பெண்கள் என அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று அஞ்சப்படுகின்றது.

அரியாலை, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் ஒரு குழியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற குழியில் நேற்று அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் 14 வயது மதிக்கத்தக்க சிறுமியின் எலும்புக்கூடும் காணப்படுகின்றது.

இங்கு அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. வேறு இடங்களில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களே இங்கு எடுத்து வரப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

அதற்குச் சான்றாகப் புதைகுழியில் காணப்படும் எலும்புக்கூடுகள் ஓர் ஒழுங்கு முறையாகவோ அல்லது சாதாரணமாகவோ காணப்படவில்லை. உயிரிழந்தவர்களில் அதிகமானோர் அடித்தே கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

சுமார் 20 வருடங்களை அண்டிய காலப் பகுதியில் உயிரிழந்தவர்களின் எலும்புக்கூடுகளே இங்கு அடையாளம் காணப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *