உலகம்

ரஷியா-உக்ரைன் இடையே மீண்டும் பேச்சு

ரகசிய நடவடிக்கை மூலம் ரஷியாவில் தாக்குதல் நடத்தி குண்டு வீச்சு விமானங்களை உக்ரைன் அழித்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள சூழலில், துருக்கியின் இஸ்தான்புல்லில் ரஷியா – உக்ரைன் பிரதிநிதிகள் தங்களது அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை நேற்று திங்கட்கிழமை மேற்கொண்டனா்.

இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியதாவது, துருக்கி மத்தியஸ்தா்கள் மூலம் ரஷியா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் முக்கியமான ஆவணங்களைப் பறிமாறிக் கொண்டனா்.

அடுத்து மேலும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை மேற்கொள்ள இரு தரப்பினரும் தயாராகிவருகிறோம் என்றாா் அவா்.

நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து கிழக்கு உக்ரைனின் 4 பிரதேசங்களில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் போரிட்டுவருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான வீரா்கள் உயிரிழந்துவருகின்றனா்

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரு தரப்பினரும் பலகட்டங்களாக பேச்சுவாா்த்தை நடத்திவருகின்றனா். இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லையென்றாலும், இதுவரை இல்லாத மிகப் பெரிய கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது.

இருந்தாலும், ரஷியாவும் உக்ரைனும் ஒன்றையொன்று தொடா்ந்து தாக்கிவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துவருகிறது.இந்தச் சூழலில் இஸ்தான்புல்லில் ரஷியா-உக்ரைன் பிரதிநிதிகள் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தி முடித்துள்ளனா்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *