அமைச்சரவையை மாற்றவும் அநுரவுக்கு கடும் அழுத்தம்; கட்சிக்குள்ளிருந்து கடும் நெருக்கடி

அமைச்சரவை மறுசீரமைப்பை விரைவில் மேற்கொள்ளுமாறு கட்சிக்குள்ளிருந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீது கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் விரைவில் அமைச்சரவை மாற்றத்தை எதிர்பார்க்கலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்திக்கிடையிலான மோதல் நிலைமைகள் காரணமாக பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஜே.வி.பி. கொண்டுள்ளதாகவும் ஜே.வி.பி. அமைச்சர்களிடையே முரண்பாடான கருத்துக்கள் உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அமைச்சரவை மறுசீரமைப்பை விரைவில் மேற்கொள்ளுமாறு கட்சிக்குள்ளிருந்து ஜனாதிபதி மீது கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் அவ்வாறான மறுசீரமைப்புகளை மேற்கொள்ளக்கூடாதென ஏனைய தரப்பினரிடமிருந்து ஜனாதிபதி மீது பெரும் அழுத்தம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியது போல் அரசாங்கத்தின் இயந்திரத்தை மாற்றுவதா அல்லது அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கூறியது போல் எந்தப் பிரச்சினையும் இல்லாததால் இயந்திரத்தை அப்படியே இயக்குவதா என்பதில் அரசாங்கம் தற்போது கடுமையான குழப்பத்தை எதிர்கொள்கிறது.
இதனால் எதிர்வரும் காலங்களில் அமைச்சரவை மாற்றம் அல்லது அமைச்சரவை பெருப்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவான விளக்கம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பேஸ்புக் பதிவில், சமூக முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒருபோதும் தலைகீழாக மாற அனுமதிக்கப்படாது என குறிப்பிட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
![]()