இலங்கை

ஆசியாவில் பரவி வரும் புதிய கொவிட் திரிபு இலங்கையிலும்

ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபு நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் வைரஸின் துணை வகைகளான எல் எஃப் பொயிண்ட் செவன் மற்றும் எக்ஸ் எஃப் ஜி என்ற திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த நாட்டில் பதிவாகி வருவதாகக் வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல வைத்தியசாலைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் குறித்து வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா கூறியுள்ளார்.

இருப்பினும், இந்த கொவிட் திரிபு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்வாய்ப்பட்ட நோயாளர்கள் பாதிக்கப்படக்கூடிய குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், முகக்கவசம் அணிவது மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம் என்றும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொவிட் வைரஸின் புதிய திரிபுகள் அவ்வப்போது பரவுவதுடன், இது தொடர்பாக சுகாதார துறை தொடர்ந்து விழிப்புடன் இருப்பதால், தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், காலி தேசிய வைத்தியசாலையில் சமீபத்தில் இறந்த ஒன்றரை மாத குழந்தையும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

குழந்தையின் உயிரியல் மாதிரியை கொழும்பு வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிய பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் எமது செய்தி சேவை வினவிய போது குறிப்பிட்டார்.

இருப்பினும், ஆசியாவில் தற்போது பரவி வரும் புதிய திரிபாக இந்த வைரஸ் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *