அரசுக்குள் மோதலா? பிரதமர் மாறுகிறாரா?; கூறுவோரின் தலையை பரிசோதிக்கவும்

அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதாகவும், பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படப் போகின்றது என்றும் கூறுபவர்களின் தலையை பரிசோதிக்க வேண்டும் என அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அமைச்சர் லால்காந்த மேலும் கூறியுள்ளதாவது,
அமைச்சரவை மாற்றம் ஏற்படப் போகின்றது என்றும், பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படப் போகின்றது என்றும் மற்றும் அரசாங்கத்திற்குள் உள்ளக மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கூறுபவர்களின் தலையை பரிசோதிக்க வேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஏதாவது கூற வேண்டும் என்பதற்காக எதனையாவது கூறுகின்றார்.
இதேவேளை எதிர்க்கட்சிகளும் பொய்களையே கூறிக்கொண்டிருக்கின்றன. ஆனால் தேசிய மக்கள் சக்தி இன்னும் விரிவுப்படுத்தப்படவில்லை. மேலும் விரிவுப்படுத்த உள்ளூராட்சி சபை தேர்தலில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி நாங்கள் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்போம். இதில் கொழும்பு மாநகர சபையில் எமது ஆட்சி உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க மட்டுமே உள்ளது என்றார்.
![]()