இலங்கை

பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்?; ஜனாதிபதியின் கூற்றுடன் என்னால் உடன்படி முடியாது

நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது. பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? வடக்கு, கிழக்கில் முகாம்கள் அகற்றப்படுகின்றன என்றால் அதன் ஊடாக எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யுத்தம் நிறைவடைந்தமை தொடர்பில் எமக்கு பெரு மகிழ்ச்சியிருக்கிறது. அவ்வாறில்லை எனில் இன்று இந்த நாடு இந்தளவிற்கும் எஞ்சியிருக்காது.

நிச்சயம் பிளவு ஏற்பட்டிருக்கும். எவ்வாறிருப்பினும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் நாட்டின் முன்னேற்றப்பயணம் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இல்லை.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து ஆட்சியாளர்களும் அதற்கு பொறுப்பு கூற வேண்டு;ம். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள சில இலங்கை தமிழர்கள் தமது வீசாவைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது வர்த்தகங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த காரணியை அடிப்படையாகக் கொண்டு தம்மால் மீண்டும் இலங்கைக்கு செல்ல முடியாது என்பதை அவர்கள் அந்த நாடுகளிடம் கூறுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டுக்கு ஓரளவு அச்சுறுத்தல் காணப்படுகிறது.

அந்த அச்சுறுத்திலிருந்து முற்றாக மீள்வதற்கும், ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் யாரோ ஒருவருக்கு முன்னாள் மண்டியிடுவதை விடுத்து பலம் மிக்க நாடாக மாற்றமடைய வேண்டும்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் கரிசணை கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருந்தால் மீண்டுமொரு பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படலாம். இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்பது சர்வதே நாணய நிதியத்தின் பொறுப்பல்ல.

எனவே பாதுகாப்பு படைகளின் ஆளணியைக் குறைப்பதாகக் கூறுவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பாதுகாப்பு படைகளை கலைத்து அதன் மூலம் மீதப்படுத்தப்படும் 80 பில்லியனைக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

தேசிய பாதுகாப்பு என்பதை நான் பார்க்கும் கோணத்தில் இந்த நாட்டில் காணவில்லை. பொது மக்கள் பாதுகாப்பும் கூட அச்சுறுத்தல் மிக்கதாகவே காணப்படுகிறது.

பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் ஏதேனுமொரு பலவீனத்தின் காரணமாகவே நாட்டில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

எனவே தான் அனுபவமும் அறிவும் மிக்கவர் அந்த பொறுப்பினை ஏற்க வேண்டும் என்று நாம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

வடக்கு மற்றும் கிழக்கில் முகாம்கள் அகற்றப்படுகின்றன என்றால் அதன் ஊடாக எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும். வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

தொடர்ச்சியாக அதற்கு இடமளித்தால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய கிருமிகள் உருவாகுவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதைப் போன்றாகிவிடும்.

தேசிய போர் வீரர் தினத்தில் உரையாற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமைதிக்காகவே அனைவரும் போராடியதாக கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது. அமைதிக்காக தலதா மாளிகையின் மீதோ, ஸ்ரீ மகா போதியின் மீதோ தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது.

பிரபாகரன் அமைதிக்காக போராடியதாகக் கூறினால் அதனை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜனாதிபதி அவரது நிலைப்பாட்டைக் கூறியதால் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த இடத்தில் ஓடிச் சென்று நீ கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூச்சலிடுவதற்கு நான் முட்டாள் இல்லையல்லவா? என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *