உலகம்

புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்வதில் தோல்வி – வட கொரிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்யும் போது ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து வடகொரியா கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, அதிகாரிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஒரு குற்றச் செயல் என்று விவரித்ததாகக் கூறப்படுகிறது.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட போர்க்கப்பலை அறிமுகம் செய்யும் நிகழ்வின் போது கப்பலின் அடிபாகங்கள் சில சேதமடைந்துள்ளது.

கப்பலை விடுவிப்பதில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கப்பல் நகர்ந்து செல்வதில் சிக்கில் ஏற்பட்டு கப்பலின் அடிபாகங்கள் சில சேதமடைந்துள்ளது. அதிபரின் கண் முன்னே நடந்த இந்த சம்பவத்தால் அவர் மிகுந்த கோபமடைந்ததாக தெரிகிறது.

கடற்படை சக்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன், நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள துறைமுக நகரமான சோங்ஜினில் புதிய போர்க்கப்பல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

விழாவின் போது, ​​5,000 தொன் எடையுள்ள நாசகாரக் கப்பலின் அடிப்பகுதியின் சில பகுதிகள் சரிந்து விழுந்ததால், கப்பல் சமநிலையை இழந்தது. இருப்பினும், விபத்துக்கான காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தடுப்பு காவலில் உள்ளவர்களில் கப்பலை கட்டிய வடக்கு சோங்ஜின் கப்பல் கட்டும் தளத்தின் தலைமைப் பொறியாளரும் அடங்குவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கப்பலானது ஏவுகணை சோதனை, அணுசக்தி திறன் கொண்ட பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகள் உட்பட பல்வேறு ஆயுத அமைப்புக்களை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *