இலங்கை

மாகாண சபைக்கு விரைவில் தேர்தல்; ஆரம்ப கட்டப் பணிகள் ஆரம்பம் 

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளைன் கேள்வி நேரத்தின் போது, மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நிசாம் காரியப்பர் கேள்வியெழுப்பி கூறுகையில், மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இதற்கமைய தேர்தலை நடத்தும் வகையில் சட்டமூலத்தை தயாரிக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சு ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதா? அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லையாயின் ஏன் எடுக்கவில்லை?

மாகாண சபைகள் வடக்கு ,கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களுக்கும் முக்கியமானது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தனிநபர் பிரேரணை ஒன்றை கொண்டு வந்தார்.இருப்பினும் அந்த பிரேரணை நிறைவேற்றப்படவில்லை.

இதுவொரு முக்கியமான விடயம்.ஆகவே இந்த கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சரிடம் கேட்கிறேன் என்றார்.

இதற்கு பதிலளித்த மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிக்கையில்,

மாகாண சபைகள் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் சட்ட ரீதியான ஒருசில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்கமைய அமைச்சு மட்டத்தில் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகள் தேர்தலை நடத்துவதற்கு கடந்த மாதங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் அமைச்சுசார் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாகாண சபைத்தேர்தல்கள் தொடர்பில் முன்னாள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா முன்வைத்த திருத்த யோசனை மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த தனிநபர் பிரேரணை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளோம். மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

தொழில்நுட்ப ரீதியில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அதுவரையில் தற்போதைய மாகாண சபை முறைமைக்கு அமைய தேர்தலை நடத்தி நிர்வாக கட்டமைப்பை ஸ்தாபிக்க துரிதகர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *